Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ணூர் மட்டுமல்ல மெரீனா வரை பரவிய எண்ணெய் கசிவு.. கடலில் காலை நனைக்கவே அச்சப்படும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்திலிருந்து 30 கி.மீ. கடந்து வந்த எண்ணெய் படலத்தால் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்த மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரமே பாழாகிப் போய் விட்டதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலைஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் எண்ணெய் படலம் பரவியது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள பல நூறு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவு படிந்ததால், அவை அனைத்தும் பாழாகி விட்டது.

Not only Ennore oil spill has spread to Marina Chennai People are afraid

ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் அதோடு வந்த எண்ணெய் படலமும் வீடுகளின் சுவர்கள் மற்றும் உடைமைகளில் படிந்தது. எண்ணெய் படிந்த பகுதிகளில் எல்லாம் கடந்த ஒரு வாரமாக துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதக்கின்றன.

தற்போது சிபிசிஎல் நிறுவனமே எண்ணெய் கழிவுகளை அகற்றினால் ஒரு டிரம்முக்கு ரூ.1000 தருவதாக கூறினார்கள். அதன்படி, ஒரு பேரல், ஒரு ஜக்கு, ஒரு புனல் ஆகியவற்றை கொண்டு எண்ணெய் கழிவை அள்ளி வருகிறோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். 75க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் கச்சா எண்ணெய் படலம் அகற்றப்படுகிறது.

இதனிடையே முகத்துவார பகுதியில் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் சார்பில், 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் கடல் மற்றும் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் உயர்நிலை குழுவும் அமைத்துள்ளது. எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல என்றும், மனிதரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பேரிடர் என பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில் சிபிசிஎல் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையில், இந்த எண்ணெய் கசிவு சிபிசிஎல் நிறுவனத்தின் தெற்கு வாயிலில் இருந்து வெளியேறியுள்ளது. மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து வந்த தண்ணீர் சிபிசிஎல் வளாகத்துக்குள் புகுந்து, தண்ணீரின் அளவு உயர்ந்ததால், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக டிசம்பர் 8 ஆம் தேதியன்று சிபிசிஎல் உள்ளிட்ட அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் எண்ணெய்யை வெளியேற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த எண்ணெய் கசிவு பக்கிங்ஹாம் கால்வாய் முதல் 11 கிமீ தூரத்துக்கு பரவியுள்ளது. சிபிசிஎல் நிறுவனம் அருகேயுள்ள தோஷிபா ஆயில் நிறுவனமும் கழிவுகளை முறையாக கையாளவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில், எண்ணெய் கசிவு விவகாரத்தில் தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் இதுவரை மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களுக்கான இடைக்கால நிவாரண தொகையை சிபிசிஎல் நிர்வாகம் வழங்க வேண்டும். வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல. இது மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என குற்றம் சாட்டப்பட்டது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் தரப்பில் வாதிடும்போது, இரு கப்பல்கள் மோதியதால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது அதை அகற்றிய கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாகவும் தண்ணீரில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றுவதற்கான வழிமுறைகள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காட்டுக்குப்பம் மீனவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர மாசு கட்டுப்பாட்டு வாரியம் எதுவும் செய்வது இல்லை என்றும், மக்களுக்கு தேவையானவற்றைக்கூட கண்டறியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள் டிசம்பர் 7ஆம் தேதியன்று சிபிசிஎல்-ன் தெற்கு வாயிலில் மட்டுமே கசிவு இருந்ததாக கூறப்படும் நிலையில் குழாய்கள், எண்ணெய் கலன்களின் கசிவை ஆய்வு செய்யவில்லையா? மேலும் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, மழை வெள்ள நிவாரணம் போல எண்ணெய் பாதிப்புக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லையே ஏன்?

மேலும் 48 மணி நேரமாக எண்ணெய் கசிவை தடுக்க பூம்ஸ் தடுப்பாண்களை வைக்க முடியவில்லையா, தற்போது 11 கி.மீ. தூரத்துக்கு பரவியுள்ள நிலையில் இரு துறைமுகங்கள், கடலோர காவல்படை ஆகியவற்றின் ஆலோசனைகளையும் அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தினர்.

மேலும் தொடர்ந்து அவர்கள் கூறும்போது, எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டது என்பது குறித்தும், எவ்வளவு அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் எந்த விவரமும் அறிக்கையில் இல்லை. ஏன் ட்ரோன் மூலமாக இந்த கசிவை மதிப்பிடக் கூடாது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குடியிருப்பு பகுதிகள், மீனவர்கள் மற்றும் விவசாய பகுதிகளின் சேதம் எவ்வளவு என தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதுதொடர்பாக விளக்கமளிக்க அரசு உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லையா எனக்கூறி அதிருப்தி தெரிவித்தனர்.

எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீட்டருக்கும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350 மீட்டருக்கும் தடுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவையும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் கூறும்போது, கடலில் எண்ணெய் கலக்கவில்லை என்பது கடலோர காவல்படை ஆய்வில் உறுதியாகியுள்ளது. கழிமுகத்தில் இருந்து கடலுக்குள் எண்ணெய் செல்லாமல் தடுக்க ஒரு கிமீ தூரத்துக்கு மிதவைகள் அமைக்க வேண்டியுள்ளது. தற்போது வரை 75 மீட்டருக்கு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணெய் கசிவை தடுக்கவும், கலப்பை சரிசெய்யவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

சிறார்களை இப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது. எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு போதிய நிவாரணம் மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் தீர்ப்பாய உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

முகத்துவார பகுதியில் மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட 3 எண்ணெய் உறிஞ்சும் வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலிருந்து மிதவை தடுப்புகள் கொண்டுவரப்பட்டு 750 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் கடலின் பிற பகுதிகளுக்கு எண்ணெய் பரவுவது தடுக்கப்படும். மேலும் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்காக தூய்மை பணிகளை மேற்கொள்ளும் முகமை மூலம் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

எண்ணெய் கழிவு பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்று மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். முகத்துவாரப் பகுதிகளில் தான் இறால், நண்டு, ஆமைகள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். எண்ணெய் கழிவுகளால் அவைகள் பாதிக்கப்படுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் ஆகும்.

ஏனென்றால் முகத்துவார பகுதிகளில் 3 அடி ஆழம் வரை எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது. முழுமையாக அகற்றி மீண்டும் பழைய நிலை வர மேலும் பல காலங்கள் ஆகலாம். முகத்துவாரங்களை நம்பியுள்ள மீனவர்களுக்கு பெரிய பாதிப்பு எதிர்காலதிற்கும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். எண்ணெய் கழிவுகள் படர்ந்திருப்பதை பார்த்து மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்த மக்களும் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+