சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்! கனமழை பெய்யும் என எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடி,மின்னலுடன் கனமழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவடைந்தது. கோவை தொடங்கி கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களிலும் இது இயல்பை விட அதிக மழையை கொடுத்தது. ஆனால் நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு போதுமான மழை கிடைக்கவில்லை. தூத்துக்குடியும் இயல்பை விட குறைவான அளவே மழையை பெற்றிருந்தது.

இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை இது இயல்பை விட 18% கூடுதல் மழையை கொடுத்திருக்கிறது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதேபோல இன்று காலையில் சென்னையில் லேசான மழை பெய்திருந்தது.
இந்நிலையில், மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications