ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்! கொளுத்தும் வெயிலுக்கு பிரகே்! வெடிக்கும் மேகங்கள்.. 10 மாவட்டங்களில் மழை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து இன்று காலை விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
8 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்று தொடங்கி 7ம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°-44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
வெப்ப அலையை பொறுத்த அளவில், இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 5 மற்றும் 6ம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரிக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரம்பலுர், அரியலூர், கோவை, கன்னியாகுமரிக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுக்கிறது. இந்த 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications