சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! காலை 10 மணி வரை உஷார்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை தென்கிழக்கு+வடகிழக்கு என இரண்டு பருவமழைகளும், தேவையான அளவுக்கு மழையை கொடுக்கும். அந்த வகையில் கடந்த மாதத்துடன் தென்கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இது இயல்பான அளவுக்கு மழையை வழங்கியது. இதனை தொடர்ந்து அக்.1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நேற்று வரை இது 82% அளவுக்கு கூடுதலான மழையை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பட்டிணம்பாக்கம், அண்ணா சாலை, அடையாறு, வில்லிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, திருமங்கலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முன்னதாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை ஒட்டி கரையை கடந்திருந்தது. இதனால் கனமழை அச்சம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதிகாலை முதல் மழை மீண்டும் தொடங்கியுள்ளது.
முன்னதாக இன்றைய வானிலை குறித்து சென்னை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், "மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்தது.
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications