உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல.. துபாயில் நடந்தது குறித்து பூவுலகின் நண்பர்கள் பதிவு
துபாய்: துபாயில் இரண்டு ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது என்றும் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பதைப்போல காலநிலை மாற்றத்தை கண்டு கொள்ளாமல் விட முடியாது என்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலைவன தேசமான ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இயல்பாகவே வறண்ட வானிலை தான் காணப்படும்... ஆனால் வரலாற்றில் இல்லாத ஒன்றாக இடைவிடாமல் செய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.. துபாயின் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம், விமான நிலையமா அல்லது கடலா என்பது போல் தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கின்றன. உலகின் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையமான துபாயில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. துபாய் மால், எமிரேட்ஸ் மால் உள்ளிடட வணி வளாகங்கள் தண்ணீர் தத்தளிக்கின்றன. துபாயின் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் முழுவதும் பெய்யும் மழை நேற்று ஒரே நாளில் பெய்ததாகவும், இதனால் பாதிப்பு அதிகமாக உள்ளதாக துபாய் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
அதிகப்படியான ஏசி பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் பயன்பாடு, காற்றினை மிக மோசமாக மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள். காடுகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டட இயற்கை வளங்களை அழிப்பது,. இயற்கையை பெரிய அளவில் உருவாக்கும் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் அழிவு போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன.

இதனால் கடல் நீர் மட்டம் அதிகரிப்பு, கடலில் வெப்ப நிலை அதிகரிப்பது போன்ற காரணங்களால் எல் லினோ பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்படுகிறது. இதன் காரணமாக சராசரியாக ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை, சில நாட்களில் பெய்கிறது.. தொடர்ந்து 24 மணி நேரம் அல்லது 36 மணி நேரம் மழை பெய்வது போன்ற நிகழ்வுகள் உலகம் முழுவதும் அடிக்கடி நடக்கின்றன.. இப்படியான மழைகள் பெய்தால் உலகின் எந்த தேசமும் தாங்க முடியாது... சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை துபாய் மழை ஏற்படுத்தி உள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வெளியிட்ட பதிவில், "இரண்டு ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது துபாயில். கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்பதைப்போல காலநிலை மாற்றத்தை இனியும் ஒரு நாடோ / ஊரோ / குடும்பமோ / தனிநபரோ கண்டுகொள்ளாமல் கடந்துவிட முடியாது. அப்படி கடக்க முற்படுவது பெரும் பொருளாதார - உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கும். உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல!" என்று கூறியுள்ளார்.
இதனிடையே ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுமார்க்கமாக துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .












Click it and Unblock the Notifications