சற்றுமுன் கிடைத்த தகவல்.. அடுத்த 3 மணி நேரம் 17 மாவட்டங்களில் தண்ணீர் தேங்கும் அளவு மழை கொட்டும்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். வலுக்கும் நிலையில் சாலைகள் இருக்கலாம். போக்குவரத்து பாதிப்புகளும் சில இடங்களில் ஏற்படலாம். பழைய, பழுதடைந்த கட்டிடங்கள் சேதமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 27 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை : பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் அதிக வெப்ப நிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள்: பிப்ரவரி 26 ஆம் தேதி குமரிக் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications