ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. தேவையான உதவிகள் செய்யப்படும்.. ஸ்டாலினிடம் போனில் உறுதியளித்த பிரதமர் மோடி
சென்னை: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி புயல், வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும் புயல் பாதிப்பு தொடர்பாக தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததாக ஸ்டாலின் கூறினார்.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களை பெரும் சேதத்திற்குள்ளாகியது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். புயல், வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதகவும் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்ததாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி,
புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு புயல் பாதிப்பிற்கு ரூ.2000 கோடி நிவாரணம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் இதுவரை கண்டிராத வகையில் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பு நிவாரணமாக 2,000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் #CycloneFengal சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, #NDRF-இல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications