புழல் ஏரி..பாதுகாப்பாக உள்ளது.. பதற்றம் வேண்டாம் என அரசு அறிவிப்பு
சென்னை: புழல் ஏரியில் மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புழல் ஏரி உடையும் நிலையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில், தமிழக அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் புழல் ஏரி நிரம்பியுள்ளது. புழல் ஏரியின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இதனால் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 2120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும்.
இன்றைய தினம் காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.
அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது, இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.
இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications