சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று இரவுக்குள் சம்பவம் இருக்கு.. அலர்ட் விடுத்த வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடக்கு திசையில் நகர்ந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அடுத்த 3 மணி நேரத்திற்குள் அதாவது இரவு 7 மணிக்குள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications