ஹீட் ஸ்ட்ரெஸ் ஆபத்து! இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை.. அதோடு இந்த சிக்கலும் இருக்கே!
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஜூலை 21ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 15 (இன்று), ஜூலை 16 (நாளை) ஆகிய இரு நாட்களும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 17 முதல் ஜூலை 21ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்சம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
வெப்ப அழுத்தம்: 15.07.2023 மற்றும் 16.07.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையில் வானிலை: சென்னையில் வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை: வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அரபிக் கடலுக்கு திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications