Rain Alert: கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கப் போகுது
சென்னை: மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை, மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து, மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியா குமரி மாவட்டம் திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா 18 செ.மீ. மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஒடிஷா அருகில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் அக்டோபர் 2 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications