அடுத்த 3 மணி நேரம் ‘குளுகுளு’ கிளைமேட் தான்.. 8 மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, குமரி, ஈரோடு, கோவை உள்பட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியிருந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரங்களில் மழையும் பெய்து வந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4 ஆம் தேதியில் இருந்தே இதே நிலை தான் தமிழகத்தில் நீடித்து வந்தது. ஒரு நான்கு நாட்களுக்கு தொடர்ந்து வெயிலும், பின்னர் மீண்டும் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயிலும் என மாறி மாறி கிளைமேட் நீடித்து வந்தது.

8 மாவட்டங்கள்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட காஞ்சிபுரம், கோவை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து எடுத்தது. தலைநகர் சென்னையிலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இன்று தமிழகத்தில் தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் வெயில் அடித்தது. பின்னர் மீண்டும் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை தேனி, திண்டுக்கல், கோவை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல நெல்லை, குமரி, ஈரோடு, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் அடுத்த 36 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.
28 ஆம் தேதி வரை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 24 அம் தேதி முதல் 26 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக வரௌம் 26 ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27, 28 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வரும் 24, 25, 26 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை ஒட்டி அல்லது இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications