ஆடி வந்தாலும் அடி கன்ஃபார்ம்..வெளுக்கப் போகுது மழை! குடையோட ரெடியா இருங்க மக்களே! மெட் சொன்ன அப்டேட்
சென்னை: தமிழகத்தில் 13ம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. குறிப்பாக இன்று தமிழகத்தில் திருவள்ளூர், கோவை, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதத்தில் அதாவது ஜூலை 15ஆம் தேதிக்கு பிறகு ஆடிக் காற்று துவங்கும். அப்போது கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால் ஜனவரி மாதத்தில் இருந்தே வானிலையில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவு வெயில் பதிவான நிலையில், வெப்பம் உச்சத்தை தொடும், ஏப்ரல் மே மாதங்களில் அடிக்கடி மழை பெய்து மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இனி தொடர்ந்து மழைக் காலம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் முழுவதும் மிகக் கடுமையான வெயில் கொளுத்தியது.

பருவமழையும் கை கொடுக்காத நிலையில் தற்போது வழக்கம் போல் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தான் மழை பெய்யுமா என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போதைய பலத்த காற்று வீச தொடங்கி விட்டது. ஆனால் உள் மாவட்டங்களில் மிகக் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் தேனி, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது.
வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் 13 ஆம் தேதி வரையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. குறிப்பாக இன்று திருவள்ளூர், கோவை, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறி இருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications