அடித்து பெய்யும் மழை.. இன்றும் விடாது.. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்
சென்னை: அரபிக்கடலில் உருவாகியுள்ள சக்தி புயல் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், சென்னையில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று மதியத்தில் இருந்து மாலை வரை தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதேபோல் நேற்று இரவும் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இன்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

வலுவிழக்கும் சக்தி புயல்
நேற்று முன் தினம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" தீவிர புயல், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (05-10-2025) காலை 05.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கே சுமார் 820 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்ககூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
* தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* நாளை 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
8 ஆம் தேதி கனமழை கொட்டும்
* வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
* வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* வரும் 10, 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
இன்று முதல் அக்.9 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இந்த தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3" செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (06-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications