சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாயங்காலம் கடையை மூடிரலாம்! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், இந்த மழை நின்ற பிறகு மீண்டும் ஒரு கனமழை பெய்யும் என்றும், சாயங்காலம் கடையை மூடிரலாம் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பருவமழையின் 4 வது சுற்று நேற்று தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படியே நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மேகங்கள் சூழ்ந்தன.

தொடர்ந்து நேற்று இரவும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இன்று அதிகாலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், சேலம், தஞ்சை, நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை சுமார் காலை 11 மணி வரை பெய்தது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அம்பை, பாபநாசம், பாளையங்கோட்டை, சேரன்மாதேவி பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. சென்னையிலும் இன்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வருகிறது. கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் அணையின் நீர்மட்டம் கடகடவென 21.50 அடியை தாண்டியுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் அணையானது தொடர்ந்து அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் கனமழை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், கொல்கத்தாவில் இருந்து வரவேண்டிய ஏர்லைன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை ஆவடி பகுதியில் 5 க்கும் மேற்பட்ட தெருக்களில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை, பட்டாளம் ஆஞ்சிநேயர் கோவில் தெருக்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதேபோன்று துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் குண்டு குழியுமான சாலையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை மையமும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னையில் கனமழை பெய்து வருவதாகவும், இந்த மழை விட்ட பிறகு மீண்டும் ஒருமுறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னையில் அடுத்த ரவுண்டு மழை தொடங்கியுள்ளது. தற்போது பெய்யும் மழை குறுகிய நேரம் கொண்டதாகவும் தீவிர மழையாகவும் இருக்கும். இந்த மழை விட்ட பிறகு மீண்டும் ஒருமுறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை வேளைக்கு பிறகு நாம் கடையை இழுத்து மூடிவிடலாம் (மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதாக சூசகமாக குறிப்பிட்டுள்ளார்). இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications