சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை விடவே விடாது- வானிலை மையம்
சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது போல் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. பயங்கர காற்றுடன் மழை பெய்த நிலையில் இடி மின்னலும் இருந்தது.

நேற்று காலை முதல் வெயில் இருந்த நிலையில் மாலைக்கு மேல் மழையுடன் இடி, நல்ல தரைக் காற்று, மரங்கள் எல்லாம் வளையும் அளவுக்கு காற்று வீசியது.
சென்னை முகப்பேர், அமைந்தகரை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு, பட்டாபிராம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை, மந்தவெளி, லஸ், கோயம்பேடு, திநகர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அது போல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் காலை 5.30 மணி வரை சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications