விஷால் வீட்டை விடுங்க! போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டின் முன் கரைபுரளும் வெள்ளம்! Bunனுடன் ரசிகர்
சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்த் வீட்டையும் வெள்ள நீர் சூழ்ந்துக் கொண்டது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையையே ஒரு புரட்டி புரட்டி விட்டு ஆந்திரா பக்கம் கரையை கடந்துவிட்டது. சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு செல்ல மிக்ஜாம் புயல் வேகத்தை குறைத்து குறைத்து சென்றதால் சென்னைக்கு பெரும் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் தேங்கி காட்சியளிக்கிறது. மேற்கு தாம்பரத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அங்கு கழுத்தளவு தண்ணீரில் பொதுமக்கள் தத்தளித்து வருகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு எப்படி சென்னை வெள்ளத்தால் தத்தளித்த மக்கள் தலையில் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்தார்களோ அதே போல் இந்த மிக்ஜாம் புயல் பாதிப்பால் மக்கள் இடுப்புளவு நீரையும் பொருட்படுத்தாமல் வெளியேறி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அது போல் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், லஸ், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரி உடைந்தது, ஆற்றில் கரைபுரளும் வெள்ளம் போன்றவற்றால் இத்தகைய பாதிப்பு இருக்கிறது.
இந்த நிலையில் பல இடங்களில் நீரில் மீன்கள் அடித்து வரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை பலர் பிடித்துக் கொண்டு வீட்டில் சமைத்து சாப்பிடுகிறார்கள். அது போல் வெள்ளம் அதிகமான பகுதிகளில் மற்ற பகுதி மக்கள் வந்து எப்படி இருக்கிறது என பார்வையிடுகிறார்கள்.

சிலர் வேறு பகுதி மக்களுக்கு உணவு, நீர், போர்வை, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவர் வீட்டு செக்யூரிட்டி பூத்தும் தண்ணீரில் தத்தளித்துள்ளது. அங்கு வந்த ரஜினி ரசிகர் ஒருவர் அவருடைய வண்டி சீட்டில் நிறைய பன் பாக்கெட்டுகளை வாங்கி அங்கிருப்போருக்கு கொடுத்து வருகிறார். அவருடைய வீட்டு வாசலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு பலர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கிறார்கள்.
அது போல் அண்ணாநகரில் விஷால் வீட்டருகே தண்ணீர் தேங்கியிருப்பதாக அவர் கோபமுடன் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் எம்எல்ஏ எங்கே, வரி கட்டவில்லையா, இப்படியா சாலைகள் இருப்பது என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். என் வீட்டருகேயே தண்ணீர் தேங்கியுள்ளது என்றால் சாமானியர்களின் வீடுகளில் எப்படி இருக்கும் என்றும் அவர் கேட்டிருந்தார்.கடந்த மாதம் பெய்த அடைமழையால் கோபாலபுரத்தில் தண்ணீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications