கொளுத்தும் மழை.. கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பத்தினம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு, கோட்டயம், பாலக்காட்டு உள்பட 11 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையினையும் வானிலை மையம் விடுத்துள்ளது.
கேரளாவில் நேற்று முன் தினம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கி இருந்தது. இதனால் 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மே மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே பெங்களூர், கேரளா, தமிழகத்தில் கேரள எல்லையோர மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறியது. நேற்றும், நேற்று முன் தினம் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தின் நீலகிரியில் மட்டும் நேற்று ஒரே நாளில் அவலாஞ்சியில் 35 செமீட்டரும், கோவை சின்ன கல்லாறில் 21.3 செமீ மழையும் பதிவானது. இதேபோல் நேற்று கேரளாவில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம், எர்ணாகுளம், வயநாடு, கோட்டயம், பாலக்காடு, காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழைகொட்டியது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் கேரள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. குறிப்பாக மண் சரிவு ஏற்படும் பகுதிகளில் மீட்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கன்னுர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 7 முதல் 20 செ.மீ மழை வரை அடுத்த 24 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குமரகோமில் நேற்று முன் தினம் ஒரு நாளில் மட்டும் 12 செ.மீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications