ஆக்ரோஷ ரெமல்.. புயலுக்கு பின்னும் அடங்காத மழை! தமிழகத்தில் அடுத்தடுத்த நாளில் வெளுக்க போகுது பாருங்க
டெல்லி: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ரெமல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 5.30 மணி அளவில் வலுப்பெற்றது. அதன்பிறகு நேற்று இரவில் புயலாக உருவானது... இந்த புயல் தீவிர புயலாக மாறி நேற்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

மரக்கிளைகள்: அதாவது வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கும் மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும், அப்போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்'' என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே நேற்றிரவு புயல் கரையை கடந்தது. 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரெமல் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்க தொடங்கியதுமே, கொல்கத்தா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.. இதனால் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது... சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ரெமல் புயல்: இந்த புயலால் வங்கதேசம், இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு, தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ரெமல் புயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
அதில் உள்ளதாவது: "வங்கக்கடலில் நிலவிய ரெமல் புயல் நேற்று (மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம் நோக்கி சென்றது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி, மின்னல்: 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், சென்னையில் வில்லிவாக்கத்தில் 3 செ.மீ., கொளத்தூர், திருவிக நகர், அண்ணா நகரில் 2 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல்முள்ளங்கினாவிளை, அடையாமடை, சிவலோகம், சென்னையில் அயனாவரம், ராயபுரம், பெரம்பூர், மாதவரத்தில் 1 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.
மீனவர்கள்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 86 டிகிரி முதல் 104டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள்செல்ல வேண்டாம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications