நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி: நீலகிரியில் கனமழை தொடர்வதால் கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 2 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரத்தில் இருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியிருந்தது. குறிப்பாக ஊட்டியில் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. இதற்கு முன்னர் இந்த அளவுக்கு வெயில் ஊட்டியில் பதிவானது கிடையாது. எனவே நீலகிரி மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தடுப்பாடு ஏற்பட்டது. மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன.

இப்படி இருக்கையில் தற்போது நீலகிரிக்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் 1ம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. அந்த வகையில் கடந்த 29ம் தேதி நீலகிரியின் பந்தலூர் பகுதியில் 278 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. எனவே ஊட்டி மற்றும் பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கடந்த சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை பந்தலூா் (நீலகிரி) - 70, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 50. மேலும், கோவை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 10 மிமீ முதல் 40 மிமீ வரை மழை பதிவானது.
இன்றும் நீலகிரியில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications