தொடர் கனமழை எதிரொலி.. ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ராமநாதபுரம்: டிட்வா புயல் வடதமிழகம் நோக்கி நகர்ந்து வரும் சூழலில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டிட்வா புயலாக உருவாகி இருக்கிறது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனல் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சி அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ராமநாதபுரத்தில் நேற்று முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிறுத்தத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல்பாடுகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications