தேர்தல் நேரத்தில் குட்நியூஸ்.. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இடையே தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் சமயத்தில் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் தணிய இருப்பதாக பிரபல தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் மார்ச், ஏப்ரல், மே மாதம் கோடை காலமாகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாத நடுவில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக தொடங்கியது. இந்த ஆண்டு மட்டும் அல்ல கடந்த சில ஆண்டுகளாகவே கோடை காலத்தில், வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது.

வட மாநிலங்களில் வெப்ப அலையும் வீசுவதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சும் நிலைமை உள்ளது. கோடைக்காலம் தற்போது தனது கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது. கடுமையான வெயில் காரணமாக வீட்டை வீட்டு மக்கள் வெளியே போய்விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
கொளுத்தும் வெயில்: பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கத்தால் வெளியில் சென்றால் சட்டை முழுவதும் தொப்பென்று ஈரமாகிவிடுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் ஏசியில் இருந்து வெளியே வர அச்சப்படும் அளவுக்கும் வெயிலின் தாக்கம் உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலும் கூட அனலாய் காற்று இருப்பதால் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தேர்தல் பரபரப்புக்கு இடையே கோடைவெயிலும் இரக்கம் இன்றி வதைக்க தொடங்கிவிட்டது. இப்பவே கண்ணை கட்டுது.. என்று சொல்லும் அளவுக்கு மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் தவிக்கும் நிலையில் நடப்பு ஆண்டு ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
மேற்கு தீபகற்ப பகுதிகளில்: இது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறுகையில், "ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும். மேற்கு தீபகற்ப பகுதிகளில் இதற்கு அதிக வாய்ப்புள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும்" என்று கூறியிருந்தார். தேர்தல் நடைபெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் பிரச்சாரம், பொதுக்கூட்டத்தில் பகல் வேளைகளில் வேட்பாளர்கள் கூட பிரசாரம் செய்ய யோசிக்கும் அளவுக்கு வெயிலின் கொடூரம் உள்ளது. இன்னும் வரும் நாட்களில் வெப்ப நிலை இன்னும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
வெப்பத்தின் தாக்கம் குறையும்: இதனிடையே, தேர்தல் சமயத்தில் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் தணிய இருப்பதாக பிரபல தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருக்கிறார். பிரதீப் ஜான் கூறியிருப்பதவது:- ஏப்ரல் இரண்டாவது பாதியில் இருந்து மே மாதம் முதல் பாதி வரை வடக்கு, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவில் கொஞ்சம் வெப்பத்தின் தாக்கம் குறையும்.
தென் இந்தியாவில் எப்படி?: மேற்கு இந்தியாவில் தொடர்ந்து வெப்பமாகவே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். தென் இந்தியா பற்றி எதுவும் குறிப்பிடாததால் நெட்டிசன்கள் பலரும் தென்னிந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் எந்த அளவு இருக்கும்? என்பதை பற்றி சொல்லுங்கள் என ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications