வரலாறு காணாத மழை.. அரக்கோணம் வழியாக எழும்பூர் வரும் தென்மாவட்ட ரயில்கள்
சென்னை: வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக, தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. விக்கிரவாண்டி பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டிருக்கின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபெஞ்சல் புயலானது நேற்று முன்தினம் கரையை கடந்தது. மரக்காணத்திற்கும் மாமல்லபுரத்துக்கு இடையே கரையை கடந்த இந்த புயல் கடும் மழை மற்றும் சூறை காற்றால் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்புயல் அரபிக்கடலுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், புயலின் நகரும் வேகம் குறைந்திருந்தது. அதே நேரம் புயல் என்கிற நிலையிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலைக்கு வலுவிழந்தது.

ஆனால் நகரும் வேகம் குறைந்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நின்று பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தங்கரையில் 50.3 செ.மீ, அரூரில் 33.1 செ.மீ, சேலம் ஏற்காடு பகுதியில் 23.9 செ.மீ, திருவண்ணாமலையின் ஜமனாமரத்தூர் 22.3 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் பதிவான மழை கடந்த 300 ஆண்டுகளில் பெய்த மழையைவிட அதிகம். அதேபோல கடந்த 24 நேரத்தில் 23 இடங்களில் மிக மிக பலத்த மழை பதிவாகியிருக்கிறது.
இம்மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக விழுப்புரமும், கிருஷ்ணகிரியும் இருக்கின்றன. குறிப்பாக விழுப்புரத்தில் அமைந்துள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி மார்க்கமாக எழும்பூர் வரும் ரயில்கள், விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
கொச்சுவேலியிலிருந்து சென்னை தாம்பரம் வரை செலும் சிறப்பு ரயிலும், மழை வெள்ளம் காரணமாக காலை 6.30 மணிக்கு விருதாச்சலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. 9.30 வரை ரயில் அங்கிருந்து நகராமல் இருந்த நிலையில் இறுதியாக ரயில் சென்னை செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியுற்றனர். அதேபோல விக்கிரவாண்டி பாலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விழுப்புரத்திலிருந்து ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் வழியாக எழுப்பூருக்கு திருப்பி விடப்பட்டிருக்கின்றன. இதனால் பயண நேரம் அதிகரித்துள்ளது. எனவே பயணிகள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
மருத்துவ முகாம்கள்: வெள்ளம் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 200 பேர் கயிறு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். தென்பெண்ணை ஆற்றில் 1.60 லட்சம் கன அடி நீர் திறப்பால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.












Click it and Unblock the Notifications