16 வருஷத்துக்கு அப்புறம் இவ்ளோ சீக்கிரமாவா.. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீக்கிரமாகவே அதாவது 8 நாட்களுக்கு முன்பாகவே பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தது.
அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை கொட்ட ஆரம்பித்துள்ளது. கடந்த 4 நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

6 கிமீ வேகத்தில் நகர்கிறது
மேலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு முன் கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் கூறி வந்தது. அதன்படி இன்று அல்லது நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் இன்று காலை அறிவித்து இருந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் தேதி கோவாவிற்கு வடமேற்கு பகுதியில் அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனை தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரத்னகிரி மற்றும் டபோலி இடையே இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றே கரையை கடந்தாலும், கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. இதேபோன்று கோவை, நீலகிரியின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது.
வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்தது.
தமிழகத்தில் கொட்டும் கனமழை
இதேபோன்று தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், குமரி ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று மாலை முதலே பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை கொட்டியது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக இன்று குளிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
கோவைக்கு ரெட் அலர்ட்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் நேற்று மாலை, இரவு, இன்று காலை என தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கோவை, நீலகிரிக்கு 3 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீட்பு படைக் குழுவினர் கோவை, நீலகிரிக்கு விரைந்துள்ளனர். அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications