ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயில்! 500 பயணிகளின் நிலை என்ன? எப்போது மீட்கப்படுவர்.. ரயில்வே அப்டேட்
தூத்துக்குடி: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த 800 பயணிகளில் 300 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்றும் எஞ்சிய 500 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் பேய் மழை பெய்தது. விடிய விடிய நாள் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்து மிரட்டியது. திருச்செந்தூரும் கனமழையால் வெள்ளக்காடானது.

நகர் முழுவதும் வெள்ளம் சூழந்த நிலையில் தனித்தீவு போல மாறியது. நெல்லை மாநகரும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லையில் அடையாளங்களில் ஒன்றான வண்ணாரப்பேட்டை மேம்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் இரு கரையை தொட்ட படி வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடல் போல காட்சி அளிக்கும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
500 பயணிகளை மீட்க முடியவில்லை: நெல்லை, தூத்துக்குடி மவட்டங்களில் மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டது. சில இடங்களில் மட்டுமே மின் விநியோகம் உள்ளது. நெல்லையில் 90 சதவிகித இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் தண்டவாளத்திற்கு கீழே உள்ள மண் அடித்து செல்லப்பட்டு பல இடங்களில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது.
ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்திவிட்டார். ரயில் நிலையத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பயணிகள் வெளியேறத முடியாத நிலை உள்ளது. மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில், 300 பயணிகள் மீட்கப்பட்டனர். ஏனைய 500 பயணிகளை மீட்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருகிவிட்டது.
ரயில்வே அறிக்கை: இதனால், பயணிகள் ரயில் நிலையத்திலேயே தவித்து வருகின்றனர். மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க இயலாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணிகள் எப்படி மீட்கப்படுவார்கள் என்பது குறித்து தெற்கு ரயில்வே இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை வெளியேற்ற தெற்கு ரயில்வே சார்பில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எப்படி மீட்கப்படுவர்: ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பாலத்தின் கரையில் மண் சரிவு ஏற்பட்டதால் தண்டவாளத்தின் அடிபகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில்வேயின் இன்ஜினியரிங் பிரிவு மற்றும் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து சீரமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த 800 பயணிகளில் 300 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். எஞ்சிய 500 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிக்கிய பயணிகளை வெளியேற்ற தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை காலை ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்டு சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள்"என்று தெரிவித்தது.












Click it and Unblock the Notifications