மயிலாப்பூர் போறீங்களா? சட்டென சென்னையே மாறிடுச்சே.. விடிகாலையிலும் கொட்டிய மழை..சென்னைவாசிகள் ஹேப்பி
சென்னை: சென்னையின் பல இடங்களில் இன்று காலை திடீரென பெய்த மழையால், சென்னை மக்கள் திக்குமுக்காடிவிட்டனர்.. இரவெல்லாம் பெய்த மழை, காலையிலும் தொடர்ந்து வருவதால், சென்னையே குளுகுளுவென காணப்படுகிறது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என்று ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்றெல்லாம் விட்டு விட்டு மழை பெய்தது. தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை அறிவிப்பு: அதன்படி, இன்றைய தினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளதாக கூறியிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதில், சென்னைக்கும் மழை அலர்ட் விடுத்திருந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டியது.
அதிகாலை: இன்று அதிகாலையிலும் மழை நிற்கவில்லை.. காலை முதலே இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வடபழனி, வேளச்சேரி, அடையாறு, தாம்பரம், போரூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.
அதேபோல் அண்ணா சாலை, கோட்டூர்புரம், நந்தனம் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையானது பொழிந்து வருகிறது.
மகிழ்ச்சி: மேலும், வட பழனி, கிண்டி, அடையாறு, வேளச்சேரி, தாம்பரம், போரூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் கிளைமேட்டே குளுகுளுவென காணப்படுவதால், சென்னைவாசிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications