தமிழகத்தில் கோடை மழைக்கு சான்ஸ்.. அனலுக்கு நடுவே வெளுக்க போகுது! எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழைக்கு சான்ஸ் இருப்பதாகவும், சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளை தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ் இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இனி ஒரு வாரத்துக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கோடை மழை வெளுத்து வாங்கும் என்றும், இந்த மழையானது மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

அடுத்த ஒரு வாரத்துக்கு மழைதான்
அதாவது அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கோடை மழை தீவிரம் அடையும் என்று கூறியுள்ளனர். அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதாவது பகல் நேரங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை வானிலை மையம் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கிளைமேட் எப்படி இருக்கும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று கனமழை பெய்யும் இடங்கள்
அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (15-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோடை மழை தொடரும்
16-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-05-2025 மற்றும் 18-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (14-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 14-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 16-05-2025 மற்றும் 17-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
* இன்று 15-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 16-05-2025 மற்றும் 17-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
* 13-05-2025 முதல் 15-05-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் 17-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: இன்று முதல் 16-05-2025 வரை: தென்மேற்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications