School leave: சென்னை பள்ளிகளுக்கு அடுத்த விடுமுறை எப்போது? பசங்க வயிற்றில் பாலை வார்த்த வெதர்மேன்!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் நவம்பர் 20, 21,22 ஆம் தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் பள்ளிகளுக்கு அடுத்த விடுமுறை எப்போது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் அடுத்தக்கட்ட மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன. குறிப்பாக வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு மழை இருக்கிறது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிக மழை பெய்யாது. எனவே சிறு சிறு மழையை ரசிக்கலாம். சென்னையில் மிக கனமழை பெய்வதற்கான நேரம் வரும்.
அது போல் அடுத்த முறை உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை பள்ளி மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படும் (அதாங்க சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு). என தெரிவித்துள்ளார். அதாவது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 22 ஆம் தேதி உருவாகிறது. அதன் பிறகு கனமழை ஏற்படும், இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதைத்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை படிப்படியாக மேற்கு திசையை நோக்கி நகரும். இதனால் உள்மாவட்டங்களில் மழை பெய்யும். ஈரப்பதம் உட்புறமாக இழுக்கப்படும்.
தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த முறை மாஞ்சோலை மலை பகுதியில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் அரபிக் கடலில் நுழைந்துவிட்டால், அடுத்த 5 நாட்களில் தென்மேற்கு வங்கிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. கடந்த மாதங்களில் மழை தீவிரமான நிலையில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான புதன்கிழமை (அக்.22)சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சென்னையில் மழையானது குறைந்து மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் பெய்து வருகிறது. கடந்த மாதம் உருவான புயலும் ஆந்திரா பக்கம் போய்விட்டது. இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாறாது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஆனால் வரும் வாரங்களில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications