வடகிழக்கு பருவ மழை வச்சு செய்ய போகுது..நவம்பர், டிச.,ல் அடுத்தடுத்து புயல்! டெல்டா வெதர்மேன் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 35 சதவீதம் வரை அதிக மழைப் பொழிவு பதிவாகலாம் எனவும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களால் அதிக மழை பதிவாகும் வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளரான 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை வடகிழக்கு பருவமழை ஆகியவை தான் அதிக அளவு மழை தரும் பருவ காலங்களாக இருக்கிறது. ஆனால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழ்நாட்டில் அதிக அளவு மழைப்பொழிவு கிடைக்கும்.
அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய டிசம்பர் மாதம் வரை இருக்கும். 2014 வரை 44 சென்டிமீட்டர் இயல்பான மழை அளவாக வடகிழக்கு பருவ மழை காலத்தில் பெய்துள்ளது. அதற்குப் பிறகு வழக்கத்தை விட அதிகரித்தே வந்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை
2018 ஆம் ஆண்டு 33.7 சென்டிமீட்டர் ஆகவும், 2019ஆம் ஆண்டு 45.4 சென்டிமீட்டர் ஆகவும், 2020இல் 47.7 சென்டிமீட்டர் ஆகவும், 2021ல் 71.4 சென்டிமீட்டர் ஆகவும், 2022 சென்டிமீட்டர் ஆகவும், 2024ல் 58.9 சென்டிமீட்டர் ஆகவும் பதிவானது. கடைசியாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்கலே இருக்கும் நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு வானிலை
அந்த வகையில் 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் தனது வானிலை முன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில்," பசிபிக் பெருங்கடலில் தற்போது லா நின்யா (La Niña) நிலை நீடித்து வருகிறது. அதோடு, இந்தியப் பெருங்கடல் டைப்போல் (IOD) எதிர்மறை நிலையில் இருந்து வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும், ஜனவரி 2026-க்கு பின் மிதமான நிலைக்குத் வர வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து உருவாகும்.
வடகிழக்கு பருவமழை 2025
மேலும், தென் சீனக் கடல் மற்றும் மேற்குப் பசிபிக் கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 30-31°C வரை உள்ளது. வங்கக்கடலில் 28-29°C வரை அதிக வெப்பநிலை பதிவாகி வருவது, புயல் மற்றும் காற்றழுத்த நிலை உருவாக அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும். வடகிழக்கு பருவமழைக்காலத்தில் தமிழகத்திற்கு சாதாரணமாக 45 செ.மீ. மழை கிடைக்கிறது. ஆனால் இம்முறை 53 முதல் 60 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக வடகிழக்கு கடலோர மாவட்டங்கள் அதிக மழை மற்றும் புயல் தாக்கத்திற்குள்ளாகும்.
கடலோர மாவட்ட மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய இடங்களில் சாதாரணத்தை விட அதிக மழை பதிவாகும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் புயல் தாக்கமும் அதிகம் இருக்கலாம். வடக்கு மற்றும் நடுத்தர, உள் மாவட்டங்களில் சாதாரணத்தை விட மழை அதிகமாக இருக்கும். கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அக்டோபர் மாதம் நீட்டிக்கப்பட்ட தென்மேற்கு பருவமழையால் கூடுதல் மழை கிடைக்கும்.
புயல்கள்
இந்த பருவத்தில் உருவாகும் புயல்கள் பெரும்பாலும் காற்றழுத்த தாழ்வை விட, மழை சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அதனால் மின்சார தடைகள், சாலை வெள்ளம், குறுகிய கால கடும் மழை போன்ற சிக்கல்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.












Click it and Unblock the Notifications