தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட அதிக மழை! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) இயல்பை விட 36 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
தமிழகம், தென் ஆந்திரத்தில் ஆண்டு மழை தேவையில், பெரும்பகுதியை வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலங்கள் ஆகும்.

இந்த 3 மாதங்களில் ஆண்டுக்கு 44 செ.மீ. மழை பெய்யும். அதிலும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 18 சதவீதம் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும். நடப்பாண்டு அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இந்த காலகட்டத்தில் ஒரு புயலும் உருவானது. அது ஆந்திராவில் கரையை கடந்ததால் கனமழையை கொடுத்துவிட்டுச் சென்றது. இதன்படி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையில்தான் சேர்க்கப்படும்.
அந்த வகையில் கடந்த மாதத்தில் 18 செ.மீ. என்ற இயல்பான அளவை விட 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இது 36 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இயல்பை விட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் 27 செ.மீ. அக்டோபர் மாத இயல்பான மழை அளவு, ஆனால் 35 செ.மீ. பெய்தது. இது இயல்பைவிட 29 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு சென்னையில் அக்டோபர் மாதத்தில் 35 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்து, தெற்கு மியான்மர் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த இரண்டு நாட்களில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனினும், இதனால் தமிழகத்தில் நேரடி தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் முதல், சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications