"ஊட்டி, கொடைக்கானல், தென்காசி போறீங்களா.." பேரிடர் மேலாண்மை துறை பரபர அலர்ட்.. கவனம் மக்களே
சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் கனமழை கொட்டும் என்பதால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. இதனால் கோடைக் காலம் தொடங்கியது முதலே பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களுக்கு அதிகம் செல்ல தொடங்கினர்.

மலை பிரதேசங்களில் டிராபிக் நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கிளைமேட் மொத்தமாக மாறிவிட்டது.
மழை: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை கொட்டி வரும் நிலையில், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே உதகை, கொடைக்கானல் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்கும்படி பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் இந்த வார்னிங்கை பகிர்ந்து.. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கத் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
எச்சரிக்கை: உதகை, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வரும் நாட்களில் கனமழை தொடரும் என்பதால் குறுஞ்செய்தி மூலமாகவும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களை அறிவுறுத்திய வருகிறது. அதாவது, "கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலா தளங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும்.. எனவே, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கவும்" என்ற இந்த மெசேஜ்ஜை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுப்பி வருகிறது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நாளை மே 19ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மழை தொடரும்: அதேபோல மே 20ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications