அடுத்த 3 மணி நேரம்.. 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.. மக்களே கவனம்!
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திராவில் இருந்து, தமிழக கடலோர பகுதி வழியாக, வடக்கு இலங்கை வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் இந்த மழை ஆகஸ்ட் 14 வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றிரவு முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
இதனால் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் காலை நேரத்தில் வெளியில் செல்வோர் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்கள், மாணவிகள் வெளியில் சென்று மழையில் சிக்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications