அடுத்த 3 மணி நேரம்.. 16 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாகவே ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வடமாவட்டங்களில் சில பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிக்கப்பட்டது. இதற்கு தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதே காரணமாக அமைந்துள்ளது.

அதே நேரம் தென்னிந்தியக் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று சென்னையை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ மழை வடதமிழகத்தில் தீவிரமாகவும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக தீவிரமாகவும் இருந்தது.
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் காலை 10 மணி வரை 16 மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications