ஆட்டத்தை ஆரம்பிக்கும் சூரியன்.. இனி தமிழகத்தில் வெயில் படுத்தி எடுக்க போகுதாம்! மிக முக்கிய அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை குறைந்துவிட்டது. மாநிலத்தில் வெயில் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே வரும் நாட்களிலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. சூரிய வெப்பம் இனி தமிழ்நாட்டைப் படுத்தி எடுக்கப் போகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி இறுதியிலேயே வெப்பம் ஆரம்பித்துவிடுகிறது. இந்தாண்டு கடைசி நேரத்தில் ஒரு சின்ன மழை பெய்ததால் மாநிலத்தில் பிப்ரவரி இறுதியில் பெரியளவில் வெப்பம் உயரவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக வெப்பம் பரவலாக ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே அடுத்த வரும் நாட்களிலும் இதே டிரெண்ட் தான் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 3 முதல் 6 வரையிலான நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலைப் பொறுத்தவரை வரும் மார்ச் 2 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். மார்ச் 3, 4 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். நாளை முதல் மார்ச் 4 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
வரும் நாட்களிலும் வெயில் தான்
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மார்ச் 3, 4 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை (01-03-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications