கடவுள் பாதி மிருகம் பாதி கதைதான்.. மழைக்கும் வெயிலுக்கும் 50-50 வாய்ப்பு! ’இந்த’ ஊர்காரங்களுக்கு லக்
சென்னை: தமிழகத்தில் ஓர் இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் இன்று முதல் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. அதே நேரத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பூமத்திய ரேகை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானதால் சில மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் அதற்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை விடை பெற்றவுடன் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ஆகிய மாதங்களில் இரவு நேரத்தில் கடுமையான பனிப்பொழிவும். பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இருந்தது.

பிப்ரவரி தொடங்கியதற்கு சில நாட்களிலேயே கோடைகாலம் தொடங்கிவிட்டது போல வெயில் சுட்டு எரித்தது. தொடர்ந்து பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியது.
இந்த நிலையில் திடீர் மழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குளிர்ந்த காலநிலை நிலவியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் நேற்று சில இடங்களில் மழையும் பெய்து இருக்கிறது.
விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று வெயிலுக்கு மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழகத்தில் 18ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 34 -35 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடானது இன்று முதல் 20-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications