வெயிலுக்கு கெட் அவுட்டு.. மழைக்கு கட் அவுட்டு! ஊட்டியாக மாற போகுது ‘இந்த’ ஊர்கள்! இனி ஜில்ஜில் தான்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று முதல் 5 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 - 4 டிகிரி வரை குறையக்கூடும் எனவும், தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நாளை முதல் 5 ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பூமத்திய ரேகை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானதால் சில மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் அதற்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை விடை பெற்றவுடன் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ஆகிய மாதங்களில் இரவு நேரத்தில் கடுமையான பனிப்பொழிவும். பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இருந்தது.
பிப்ரவரி தொடங்கியதற்கு சில நாட்களிலேயே கோடைகாலம் தொடங்கிவிட்டது போல வெயில் சுட்டு எரித்தது. தொடர்ந்து பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியது. தற்போது மார்ச் மாதம் நிறைவடைந்து உச்ச வெயிலின் தொடக்க மாதமான ஏப்ரல் தொடங்கியிருக்கும் நிலையில், கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

பகல் நேரங்களில் கடுமையான வெயில் இருந்தாலும் அதிகாலை நேரங்களில் பனிப் பொழிவும் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக தென்காசி விருதுநகர் மதுரை திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 5 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 - 4 டிகிரி வரை குறையக்கூடும். தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று வரும் 4, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications