தென் தமிழகத்திற்கு ஷிப்ட்டான மழை! சென்னைக்கு இன்று ரெஸ்ட்! நவ.12ல் நெக்ஸ்ட் இன்னிங்க்ஸ்- வெதர்மேன்
சென்னை: வடதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை. மழை மேகங்கள் மொத்தமாக தென் தமிழகத்திற்கு ஷிப்ட் ஆகிவிட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அது போல் சென்னைக்கு இன்று மழை இருக்குமா, இல்லையா என்பது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யும். கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

அது போல் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் முதல் திருவாரூர் வரை மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்த நிலையில் இன்று ரெஸ்ட். அடுத்து 12 ஆம் தேதி வாக்கில் மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 2ஆவது வாரத்தில் தொடங்கியது. அப்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத்தால் வடதமிழகத்தில் கனமழை வெளுத்தெடுத்தது. இதைத் தொடர்ந்து அந்தமான் அருகே ஒரு புயல் உருவானது, ஆனால் அது மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இன்றைய தினம் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் நவம்பர் 14ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழையானது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுதினம் 10-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications