ராயலசீமா டூ சென்னை வந்த மேகங்கள்! தென் சென்னையில் என்னா மழை? எங்கு அதிகம் தெரியுமா? வெதர்மேன் தகவல்
சென்னை: சென்னை பூந்தமல்லியில் 104 மி.மீ. மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடசென்னையை தவிர மற்ற இடங்களில் மழை பிரித்து மேய்ந்ததாகவே தெரிகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு அதிக வேகத்துடன் இருக்கும் காற்று வீசியது. இது ராயலசீமாவிலிருந்து 3 மணி நேரம் கழித்து சென்னைக்கு வந்தது. அந்த காற்று மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது.

இது போன்ற காற்றை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் பார்ப்போம். என்னா மழை! மாங்காடு, பூந்தமல்லி, தாம்பரம் மற்றும் தென் சென்னையில் அதிக கனமழை பெய்தது. காற்று மணிக்கு 55 முதல் 65 வீசியது. சென்னையில் பவர் இருக்கவும் வாய்ப்பிருந்தது.
சென்னையின் மற்ற பகுதிகளிலும் மழை பெய்தது. ஆனால் வடசென்னையில் கொஞ்சம் குறைந்த அளவிலான மழையே பெய்தது. பூந்தமல்லியில் 104 மி.மீ. மழை பெய்தது. சோளிங்கநல்லூரில் 82 மி,மீ. மழையும் செம்பரம்பாக்கத்தில் 70 மி.மீ. மழையும் திருவேற்காட்டில் 62 மி.மீ. மழையும் மடிப்பாக்கத்தில் 50 மி.மீ. மழையும் மீனம்பாக்கத்தில் 43 மி.மீ. மழையும் பெய்தது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்த ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து மழை பெய்யும் என தெரிவித்துள்ளார். சென்னையில் பலத்த மழையால் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை வந்த விமானம் ஒன்று வானிலேயே சிறிது நேரம் வட்டமடித்துவிட்டு பிறகு தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, அசோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.
இடி, மின்னலின் தாக்கமும் கடுமையாக இருந்தது. அது போல் குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த திடீர் மழையால் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
அதேபோல் தமிழக கடலோர பகுதிகளில் ஜூன் 17 முதல் 21 வரை சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் இயல்பை விட வெப்பம் இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications