"என்ஜாய் பண்ணுங்க".. சென்னை மழை குறித்த வெதர்மேன் தந்த ‛அப்டேட்’.. 20 நாட்களுக்கு பிறகு சம்பவமாம்!
சென்னை: சென்னையில் இன்று இரவு பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை மழை குறித்து 20 நாட்களுக்கு பிறகு நடந்த சம்பவம் என்றும், என்ஜாய் பண்ணுங்க என்றும் தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலம் என்பது கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை இன்னும் முடியவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் சொல்லும்படியாக பெரிய அளவில் தென்மேற்கு பருவமழை என்பது பெய்யவில்லை. மாறாக வெயில் அடிக்க தொடங்கியது.

தற்போது கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வானிலை நிலவரம் மாறியுள்ளது. வெயில் குறைந்து மாலை வேளைகளில் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளையொட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் இன்று மாலை முதல் சென்னையில் இதமான சூழல் நிலவி மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணியளவில் சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை என்பது பெய்தது. சென்னை ராயப்பேட்டை, அடையாறு, வடபழனி, தேனாம்பேட்டை, பெரும்பாக்கம், ஆவடி, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வேளச்சேரி, ரெட்ஹில்ஸ், கோடம்பாக்கம், மேடவாக்கம் உள்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்பக் பக்கத்தில், ‛‛20 நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை நோக்கி பலத்த காற்று நகர்ந்து வருகிறது. சென்னையில் பரவலாக மழை பெய்துள்ளது. மழையில் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்'' என கூறியுள்ளார்.

அதாவது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனவும் இதனால் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. சென்னையை பொறுத்தவரை நாளை, நாளை மறுநாள் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதோடு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 20 நாட்களுக்கு பிறகு பலத்த காற்றுடன்சென்னையில் மழை பெய்து வருவதை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடகிழக்கு அரபிக்கடலில் அஸ்னா புயல் உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கட்ச் கடற்கரை, அதனை ஒட்டிய பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. அது ‛அஸ்னா' என்ற புயலாக அரபிக்கடலோரம், பாகிஸ்தான் கரையோரம் உருவாகி, ஈரான் நாட்டு கரையோரமாக மேற்கு நோக்கி நகர்ந்து, ஓமன் நாட்டை நோக்கி பயணிக்க இருக்கிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications