சென்னைக்கு கடும் குளிர்.. டெல்டா+தென் மாவட்டங்களுக்கு மிக கனமழை! வெதர்மேன் வார்னிங்
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். அதே நேரம் நவ.26 முதல் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அந்த வகையில் இந்த ஆண்டு தற்போது பருவமழை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை பருவமழை வழக்கத்தை விட 3% அதிகமாக பெய்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. அதாவது சென்னையில் 544.1 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 550.7 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்டத்திலும் இந்த அளவுக்கு மழை பதிவாகவில்லை.

சென்னையை தொடர்ந்து கோவையில் 432.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இம்மாவடத்தின் சராசரி மழை அளவு 263.2 மி.மீதான். ஆகவே இயல்பை விட 64% கூடுதலாக பெய்திருக்கிறது. இருப்பதிலேயே குறைவான அளவு மழையை பெற்றுள்ள மாவட்டம் எனில், அது தூத்துக்குடிதான். இங்கு 140.8 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இயல்பாக 292.6 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் மழைப்பொழிவு இயல்பை விட 52% குறைவாக பதிவாகியிருக்கிறது. தென்காசியிலும் 41% இயல்பை விட குறைவாக மழை பெய்திருந்தது.
இப்படி இருக்கையில் நாகை தொடங்கி திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசி வரை இன்று மழை வெளுத்து வாங்கப்போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். சென்னையை பொறுத்த வரை தற்போது பனிப்பொழிவு இருந்தாலும் நவ.26 முதல் மழை இருக்கும் என்று கூறியுள்ளார். இன்று அதிகாலை முதல் டெல்டா+தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிவருகிறது.
கனமழை காரணமாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications