Cyclone Michaung: சக்கரம் நமக்குத்தான்! வடதமிழகத்திற்கு ஒன்று மட்டும் உறுதி! வெதர்மேனின் பூடக ட்வீட்
சென்னை: அந்தமான் பகுதிகளில் உருவாகும் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தீவிரமடைந்து புயலாக மாறும். இந்த புயலுக்கு மிக்ஜாம் அல்லது மிக்ஜாங் புயல் என பெயரிடப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து மேலடுக்கு, கீழடுக்கு காற்று சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும் அரபிக் கடல் பகுதியின் அருகே புயல் சின்னமும் குஜராத்தில் நிலப்பரப்பில் காற்று சுழற்சியும் உருவானது.
இதனால் நிலக்கோடு பகுதிகளில் இருந்தும் வங்கக் கடலில் இருந்து மழையை தரும் காற்று தமிழகத்தின் நடுவே செல்கிறது. இதனால் வடதமிழகம், ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக நேற்று முன் தினமும் நேற்றும் ஆங்காங்கே கனமழை கொட்டியது.
அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 28ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை வானிலை மையம் கணித்தது போல் தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நேற்று புயல் சின்னம் உருவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கும் இந்த புயல் சின்னம் வடமேற்கு பகுதியில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அடுத்த 2 நாட்களுக்கு புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த மிக்ஜாம் (மிக்ஜாங்) என பெயரிடப்பட்டது.
இந்த புயல் தமிழகத்திற்கு வருமா அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா என்பது இன்னும் இரண்டு நாட்களில் துல்லியமாக தெரியவரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் 29ஆம் தேதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மழையின் அளவு அதிகரிக்கும்.
தினமும் லேசான மழை பெய்யும். எல்லாருடைய கவனமும் காற்றழுத்தத்தின் மீதுதான் இருக்கிறது. இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்பதை காட்டிலும் வடதமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும் என்பது உறுதி என நேற்றைய ட்வீட்டில் தெரிவித்துள்ளார். தற்போது நேற்று நள்ளிரவு அவர் போட்ட ட்வீட்டில் சக்கரம் நமக்குதான் என தெரிவித்துள்ளார். அப்படியென்றால் புயலானது தமிழகத்திற்குதான் என சொல்ல வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications