வீக்கான மேகக் கூட்டங்கள்.. சென்னையில் பகலில் மழை தொடருமா? வெதர்மேனின் முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

எனினும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த தண்ணீரை உடனடியாக ராட்சத மோட்டார் மூலம் அகற்றினர். அது போல் சுரங்கங்களிலும் தண்ணீர் அகற்றபட்டு போக்குவரத்து எந்தவித தங்கு தடையின்றி செல்கிறது. இந்த நிலையில் சென்னையில் காலை பள்ளி செல்லும் நேரத்தில் மழை பெய்தது.
பிசுபிசுவென பெய்து வந்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியரோ சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என கூறிவிட்டனர். இதையடுத்து விடுமுறையா என டிவி பார்த்துக் கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் (பெற்றோர்களும்தான்!) பள்ளிக்கு கிளம்ப தயாராகினர்.
தமிழகத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று மழை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மட்டும் அல்லாது புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரை பொருத்தமட்டில் நேற்று இரவே மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மேகக் கூட்டங்கள் வலுவிழந்துவிட்டது. இதனால் இன்று பகல் பொழுதில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராகவும். அதே வேளையில் மேற்கு மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்டவைகளுக்கு இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் இன்று முதல் நாளை மறுநாள் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications