சென்னையில் வெயில் 107 டிகிரி வரை இருக்கும்.. மீண்டும் தலைகாட்டும் சூரியன்! வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்த நிலையில், தற்போது மீண்டும் வெயில் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும் என வானிலை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவெடுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிட்டிருந்த வானிலை அறிவிப்பில்,
"மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, 0830 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா-விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு -தென்மேற்கேயும், மேற்கு வங்காளம் - சாகர் ஜலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு- தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, 25ம் தேதி மாலை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, 26ம் தேதி காலை தீவிர புயலாக வலுப்பெற்று 26ம் தேதி நள்ளிரவு வங்க தேச- கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்க கூடும்.புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் 31ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்க, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று உயரக்கூடும்.
சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39'-40' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24* 30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இப்படி இருக்கையில் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையில் நாளை 107 டிகிரி ஃபாரான்ஹீட் வரை பதிவாகும் என்று எச்சரித்திருக்கிறார்.
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் மேற்கு வங்கம், வங்க தேசம் நோக்கி நகர்ந்த பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெயில் 41-42 டிகரி செல்சியஸ் அதாவது, 105-107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications