"இடி மின்னலுடன் மழை.." தமிழகத்தில் வரும் நாட்களில் என்ன கிளைமேட்.. முக்கிய தகவல் சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மாநிலத்தில் மற்ற இடங்களில் பெரியளவில் மழை இல்லை.

இதற்கிடையே வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது. அதேபோல தலைநகர் சென்னையிலும் என்ன கிளைமேட் இருக்கும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
வானிலை: அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆகஸ்ட் 11) மற்றும் நாளை (ஆகஸ்ட் 12) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 17 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாகக் கோவை வால்பாறை, சின்னக்கல்லார் பகுதியில் தலா 60 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல சோலையார் (கோவை), அறந்தாங்கி (புதுக்கோட்டை) தலா 40 மிமீ மழை பெய்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி என மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 11 இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை ஆகஸ்ட் 12ஆம் தேதி இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செல்ல வேண்டாம்: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் பொறுத்தவரை இன்றும் (ஆகஸ்ட் 11), நாளையும் (ஆகஸ்ட் 12) லட்ச தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications