"நிம்மதி.." கொளுத்தும் வெயில் கொஞ்சம் குறையும்.. சில பகுதிகளில் மழையும் இருக்கு.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வெப்பமும் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

தமிழகத்தில் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 44.0° செல்சியஸ் (இயல்பை விட +7.2° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.43.7° செல்சியஸ், ஈரோட்டில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 43.1° செல்சியஸ், திருத்தணியில் 42.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை: தமிழகத்தில் மொத்தம் 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40° - 42° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ் (இயல்பை விட +.3.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.0° செல்சியஸ் (இயல்பை விட +2.9° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் மே 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மே 7, மே 8 ஆகிய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம் குறையும்: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
வரும் மே 6ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை: மே 2, 3 ஆகிய நாட்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். மே 4 முதல் 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: மே 5ஆம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications