தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுகிறது- நெல்லையில் கரை புரண்டோடும் பெருவெள்ளம்!
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அணைகளின் நீர் திறப்பு, அருவிகள், காட்டாறுகளில் இருந்து வெள்ளம் அதிகரித்திருப்பதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென் தமிழ்நாடு மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியாக இருப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆற்றில் அருவிகளின் வெள்ளம், காட்டாறு வெள்ளம் இயல்பாகவே கலக்கும். அதேபோல மணிமுத்தாறு உள்ளிட்ட பல அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் தாமிரபரணியில்தான் திறந்துவிடப்படும். தாமிரபரணி ஆற்று நீரானது புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கும். தாமிரபரணி ஆறானது 60,000 கன அடிநீரை தாங்கக் கூடியது.

இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதலே வரலாறு காணாத பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் இந்த மாவட்டங்களின் அணைகளில் இருந்து பெருமளவு நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதேபோல காட்டாறுகள், அருவிகளின் வெள்ளமும் தாமிரபரணியில் பாய்ந்தோடின.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 117 கனஅடி நீர்வரத்து உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தாமிரபரணி நதியின் 60,000 கன அடி நீர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. இது தற்போது 1 லட்சம் கன அடிநீராக அதிகரித்துள்ளது. இதனால் திருநெல்வேலி நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்று சுவரைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. திருநெல்வேலியில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
1992-ம் ஆண்டு தாமிரபரணியில் சுமார் 2 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடியது. 2015-ம் ஆண்டும் தாமிரபரணியில் 2 லட்சம் கன அடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னர் தற்போதுதான் தாமிரபரணியில் அதிக அளவாக 1 லட்சம் கன அடிநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.












Click it and Unblock the Notifications