சென்னையை சூழ்ந்த மேகங்கள்.. மழை வருமா? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 3 மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன. இந்நிலையில், நேற்று முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மீண்டும் மழைக்கு வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயலோடு வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. புயல் முடிந்த பின்னர் இன்னும் மழை எட்டி பார்க்கவில்லை. அதே நேரம் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நீடித்திருக்கிறது. இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஆண்டின் இறுதி நாட்களில் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பரவலான பகுதிகளில் மீண்டும் கனமழை செய்யும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு, வங்கக்கடல் பகுதியில் நிலவ இருக்கிறது. இது கடல் பகுதியில் மழையை கொடுக்கும். அதேவேளை நிலப்பகுதிக்குள் இந்த நிகழ்வு கடந்து வரும்பொழுதும் மழை இருப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கனித்திருக்கிறது. இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், குமரிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications