நெல்லையில் பொத்துக்கிட்டு ஊத்தும் வானம்! அதீத மழையால் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடை
சென்னை: நெல்லையில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் அகஸ்தியர் அருவியிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடதமிழகத்தை டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதித்தது. இப்போது தென் தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்ளில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை, கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு போன்ற அணைகள் நிரம்பி வருகின்றன.
ஆங்காங்கே நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் ஊருக்குள் தேங்கியுள்ளது. தென்காசியில் தேங்கிய மழைநீரில் மக்கள் நீச்சல் அடித்து விளையாடி வருகிறார்கள். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம். நீர் நிலைகளில் இறங்க வேண்டாம். மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணுக்கு அளிக்கலாம் என ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காரையார், மாஞ்சோலை போன்ற மலை பகுதிகளிலும் அதீத மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அது போல் மணிமுத்தாறு, தாமிரபரணி போன்ற ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் மனக்காவலம் பிள்ளை நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துவிட்டது.
மேலும் ஆற்றின் கரையோரதில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அது போல் பெருமாள்புரம் என்ஜிஓ காலனி பகுதியிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில் நெல்லையில் கனமழை காரணமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications