இன்று இபி பில் கட்ட போறீங்களா? "இவங்களுக்கு" அவசியம் இல்லை.. தங்கம் சொன்ன தங்கமான அறிவிப்பு!
சென்னை: கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் இன்று மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டியது இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

புயல்: அதில், கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
செலுத்த வேண்டாம்: இது குறித்து, மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
2. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 04.12.2023 முதல் 06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும். இவ்வாறு மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று செலுத்த வேண்டாம்: அதன்படி 07.12.2023 தேதி இன்று கட்டணம் செலுத்த வேண்டுபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. 18ம் தேதி செலுத்தினால் போதும்.
மின்சார தடை; சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சாரம் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இன்னும் வெள்ளம் விடியவில்லை. சென்னையில் வெள்ளம் இருப்பதால் உடனுக்குடன் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சாலையாக தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வயர்கள் சாலைக்கு கீழே உள்ளன. அண்டர்கிரவுண்ட் வயர்கள் சேதம் அடைந்துள்ளதா.. சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .இதை பார்க்காமல்.. அப்படியே மின்சாரம் தர முடியாது. இதற்கு முதலில் தண்ணீர் வடிய வேண்டும். இதற்காக தெரு தெருவாக சோதனை செய்து படிப்படியாக மட்டுமே மின்சார வழங்கப்பட்டது.
துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது, பொது மக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications