அடுத்த ஒரு வாரத்திற்கு டமால் டுமீல்.. இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், தற்போது மழை தொடங்கியிருக்கிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மழையால் கோடை வெயில் ஓரளவுக்கு குறைந்தால் போதும் என்கிற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர்.

மழை குறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13 முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (12-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (13-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தொடங்கி 16 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14 முதல் 16 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த 5 தினங்களுக்கான வெப்பநிலை முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில் இன்று, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை தொடங்கி 16ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இயல்பை விட சற்று குறைவாகவும் இருக்கக்கூடும். நாளை முதல் 15 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையாக தஞ்சாவூரில் 35.0° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் 5 -7° செல்சியஸ் மற்றும் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 2-4° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. பகுதிகளில் அதிகபட்ச தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 3-6° செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏனைய இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 30 -35° செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 28 30° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 27 -33° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வெயில் நிலவரம் ரவுண்டப்:
இது தவிர சென்னை, கோயம்புத்தூர் (விமான நிலையம்), நிலகிரி, கடலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 1.6ºசெல்சியஸ் முதல் 3.0° செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.
வெப்ப மாறுதல்களை பொறுத்த அளவில், கோயம்புத்தூர் (வால்பாறை) மாவட்டத்தில் 2.1 செல்சியஸ் முதல் 4.0 செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் -2.1 செல்சியஸ் முதல் -4.0 செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி (உதகமண்டலம்) மாவட்டங்களில் 1.6 செல்சியஸ் முதல் 3.0 செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறது. நீலகிரி (குன்னூர்), சேலம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் -1.6 செல்சியஸ் முதல் 3.0 செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பிப்பது எப்படி?:
இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருடன் சேர்த்து எலுமிச்சை சாறு, தர்பூசணி, வெள்ளரி, முளாம்பழம் என நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது வெளிர் நிற ஆடையை அணிவது சிறந்தது. சூரிய வெப்பத்தை இந்த ஆடைகள் சிதறடித்துவிடும். எனவே அடர் நிறங்களை தவிர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications